மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள பார்கி அணையில் 3 நாட்களுக்கு முன்பு படகில் சுற்றுலா சென்றபோது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் மூலம், படகுப் பயணங்களின்போது செய்ய வேண்டிய அடிப்படை விதிகளைக் கூட அந்தப் படகை இயக்கிய ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் தனது குழந்தையை மார்போடு இறுக அணைத்தபடி தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் காட்சி கல்நெஞ்சங்களையும் உருக்குவதாக அமைந்துள்ளது. மேலும், அந்த வீடியோவில் சீல் கூட பிரிக்கப்படாத உயிர் காக்கும் லைப் ஜாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உயிரைக் காக்க உதவும் லைப்-ஜாக்கெட்டுகளைப் பயணிகளுக்கு படகு ஊழியர்கள் வழங்கவில்லை.
வீடியோவில் சுற்றுலாப் பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிடுவதும், தப்பிக்க முயல்வதும் தெரிகிறது. படகில் தண்ணீர் புகுந்த பிறகு அவசர அவசரமாக கட்டி வைத்திருந்த லைப் ஜாக்கெட்டுகளை அவிழ்த்து பயணிகளுக்கு வழங்குவது பதிவாகி உள்ளது. பயணிகள் பலர் லைப் ஜாக்கெட்டுகள் அணியாமல் அலறுவதும் தெரிகிறது.
0Likes
0Dislikes
