வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தாமதமாகத் தொடங்கியது. ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் இயல்பாக 165 மிமீ மழை பதிவாக வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 99.5 மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இது இயல்பை விட 40% குறைவாகும். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெரும் மழைப்பற்றாக்குறை நிலவுகிறது. கேரளாவில் 648 மிமீ மழைக்கு பதிலாக 427 மிமீ மட்டுமே பதிவாகியுள்ளது, இது 34% பற்றாக்குறை.
கர்நாடகாவில் 200 மிமீ மழைக்கு பதிலாக 121 மிமீ பதிவாகியுள்ளது, இது 39% பற்றாக்குறை. தமிழ்நாட்டில் 72.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மழை மறைவுப் பகுதி என்பதால், இந்த மழை இயல்பை விட 42% அதிகம் என்ற நிலையில் உள்ளது.
ஜூன் மாதத்திலும் சென்னை போன்ற நகரங்களில் வெயில் வாட்டி வதைத்தது குறிப்பிடத்தக்கது. கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள மழைப்பற்றாக்குறையால் முக்கிய நீர்நிலைகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
குடகு மாவட்டத்தில் 63.7% மழைப்பற்றாக்குறை, சிக்மங்கலூர் மாவட்டத்தில் 63.5% மழைப்பற்றாக்குறை, உடுப்பி மாவட்டத்தில் 54% மழைப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கர்நாடகாவின் காவிரி நதிகளில் நீர் இருப்பு 114.57 டி.எம்.சிக்கு பதிலாக 34.33 டி.எம்.சி என்ற அளவில் மட்டுமே உள்ளது.
மேட்டூர் அணையிலும் 40.5 டி.எம்.சி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 93 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் மட்டுமின்றி பவானிசாகர், அமராவதி, முல்லைப்பெரியார் போன்ற முக்கிய நீர்நிலைகளின் நீர் இருப்பு மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது.
ஜூன் மாதத்தில் உருவான எல்நினோ தாக்கத்தால், 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரு தாழ்வுப் பகுதி கூட ஜூன் மாதத்தில் உருவாகவில்லை.
எல்நினோ மற்றும் தாழ்வுப் பகுதி உருவாகாததே பருவமழை தீவிரமடையவோ, பரவலாகப் பெய்யவோ வாய்ப்பில்லாமல் போனதற்கு காரணம். இந்நிலையில், ஜூலை 4ஆம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்ய வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஜூலை இரண்டாவது வாரம் முதல் மீண்டும் தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பலவீனமடையக்கூடும். ஒட்டுமொத்த ஜூலை மாதத்தில், முதல் வாரத்தைத் தவிர்த்து, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் நாடு முழுவதும் மழைப்பற்றாக்குறை நிலவக்கூடும்.
இந்த ஆண்டு மேட்டூர், முல்லைப்பெரியார், பவானிசாகர் போன்ற முக்கிய நீர்நிலைகள் நிரம்புவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




