குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தனது தளங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்றும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இயங்கும் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு என்பது சமரசமற்ற அடிப்படை விதி என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவது தொடர்பாக சமூக ஊடக நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


