ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதில், அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின்படி, பிப்ரவரி 28 அன்று மினாப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 120 குழந்தைகள் உட்பட குறைந்தது 156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், லாமெர்ட் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனிடையே, 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையிலான போராட்டங்களின் போது ஈரான் பாதுகாப்புப் படையினர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதையும் இந்த குழு ஆவணப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடந்த போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் 221 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், முறையற்ற கைதுகள், சித்திரவதைகள் மற்றும் மரணதண்டனைகள் அரங்கேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போனதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவம் தனது சொந்த விசாரணையை வெளியிடாத நிலையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த மீறல்களை உடனடியாக நிறுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் ஐ.நா. குழு வலியுறுத்தியுள்ளது.





