சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்காக, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் உள்ளடக்கிய இந்த உடன்படிக்கை, அமெரிக்க நிறுவனங்களுக்கு சவுதியின் எரிசக்தி துறையில் வாய்ப்புகளை வழங்குவதோடு, நீண்டகால மூலோபாய கூட்டாண்மைக்கு சட்டப்பூர்வ அடித்தளத்தை அமைக்கும். இந்த ஒப்பந்தம் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு தொடர்பான உயர்தர விதிமுறைகளைப் பின்பற்றுவதாக அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், சவுதி அரேபியா தனது நாட்டில் யுரேனியத்தை செறிவூட்ட இது வழிவகுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அணு ஆயுதப் பரவல் அபாயத்தை ஏற்படுத்தும் என நிபுணர்களும் சட்டமியற்றுபவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த ஒப்பந்தம் அத்தகைய அபாயத்தை ஏற்படுத்தாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத் தெரிவித்தார். தற்போது இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டாய ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு எழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்






