ஈரானுக்கு நிதி அல்லது தளவாட ரீதியாக ஆதரவளிக்கும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். கச்சா எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றம் மற்றும் போலி நிறுவனங்களைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை முடக்கும் வகையில், ஈரானுக்கு எதிரான முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார்.
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் எவை என்பது குறித்தோ அல்லது அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனைகள் குறித்த விரிவான தகவல்களையோ டிரம்ப் வெளியிடவில்லை. இருப்பினும், அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஈரானின் ராணுவ வலிமை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரானுக்குப் பலமுறை வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவற்றை ஈரான் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது என டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் ஈரானின் பயங்கரவாதச் செயல்பாடுகளை முடக்கும் என்றும், அந்நாடு அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.






