பிரமாண்டமாக நடைபெற்று வரும் ஃபிபா உலகக்கோப்பை தொடரில், குரூப் H பிரிவின் முதல் போட்டி எதிர்பாராத முடிவை எட்டியது. கால்பந்து தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும், 64-வது இடத்தில் உள்ள கேப் வெர்டே அணியும் மோதின.
அசுர பலம் கொண்ட ஸ்பெயின் அணி, கேப் வெர்டேவை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி பந்தை 70% நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கேப் வெர்டே கோல்போஸ்ட்டை நோக்கி தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடியது. ஸ்பெயின் அடித்த பல பந்துகள் கோல் கம்பத்தில் பட்டு திரும்பியதால் வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் டெய்லான் லிவ்ரமென்டோ (DAILON LIVRAMENTO) தடுப்பு அரணாக நின்று, ஸ்பெயின் அணியின் கோலை நோக்கிய 7 ஷாட்களை திறம்பட தடுத்தார். இறுதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
ஸ்பெயின் அணி 27 ஷாட்கள் அடித்தும், 755 வெற்றிகரமான பாஸ்களை செய்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூன்டே காஸ்டிலோ (Luis de la Fuente Castillo) அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கேப் வெர்டே அணியை சிறிய அணி என எடைபோட்ட அவர், காயங்களைத் தவிர்க்க தனது முக்கிய அட்டாக்கிங் வீரர்களான லாமின் யமால் (Lamin Yamal) மற்றும் நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) ஆகியோரை மாற்று வீரர்களாக அமரவைத்தார். ஸ்பெயின் கோல் அடிக்க திணறிய நிலையில், ஆட்டத்தின் 71 மற்றும் 87 நிமிடங்களிலேயே அவர்களை களமிறக்கினார். காஸ்டிலோவின் இந்த முடிவுகள் ஆட்டத்தின் சமநிலைக்கு வழிவகுத்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
1Likes
0Dislikes
