தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில், இன்று பனையூர் தலைமை அலுவலகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான், இபிஎஸ் உறவினர் மேனகா பாலகிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்த முக்கிய பிரமுகர்கள் ஆவர். கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா தனது நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பையும் தவெகவுடன் இணைத்தார். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிமுக வழிமாறிச் சென்றபோது முதல் ஆளாகக் குரல் கொடுத்தவர் தவெக அமைச்சர் செங்கோட்டையன் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்ததால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர் என்றும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
1Likes
0Dislikes
