மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மறுதேர்வு இன்று (ஜூன் 21) பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய முதல் நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது. இந்த மறுதேர்வு நாடு முழுவதும் உள்ள 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் நடைபெறுகிறது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 307 தேர்வு மையங்களில் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றனர். கடந்த முறை வினாத்தாள் கசிந்ததால், தேசிய தேர்வு முகமை இந்த முறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வினாத்தாள் தயாரித்தவர்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனர். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் அச்சிடுவது முதல் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்ப்பது வரையிலான பணிகளில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால்டிக்கெட், அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுவர வேண்டும். செல்ஃபோன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை தேர்வு மையங்களுக்குள் கொண்டுவர அனுமதி இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
0Likes
0Dislikes
