லண்டனில் விற்பனை செய்யப்படும் ஃபாண்டா பானத்தில் 63 கலோரிகள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாவில் விற்கப்படும் அதே பானத்தில் மூன்று மடங்கு அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய செயற்கை நிறமூட்டிகள், இந்திய தயாரிப்புகளில் பாட்டிலின் பின்புறம் மிகச்சிறிய எழுத்துக்களில் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு, கோகோ கோலா போன்ற முன்னணி நிறுவனங்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்திய உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் வண்ணமயமான எச்சரிக்கை லேபிள்களை ஒட்டும் திட்டத்தைக் கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்திய உணவுகளின் சுவை மற்றும் தன்மைக்கு ஏற்ப இந்த எச்சரிக்கை லேபிள்கள் பொருந்தாது என்று தெரிவித்துள்ள ஆணையம், அதற்குப் பதிலாக சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அளவுகளைக் காட்டும் கருப்பு-வெள்ளை அட்டவணையை மட்டும் அச்சிடப் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து பொது சுகாதார ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்தியாவின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான உணவு மற்றும் பான சந்தையில் சுமார் 80 சதவீத தயாரிப்புகள் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது. லான்செட் இதழின் சமீபத்திய ஆய்வின்படி, 2050-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 450 மில்லியன் மக்கள் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சுமார் 20 நாடுகள் உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் தெளிவான ஊட்டச்சத்து லேபிள்களைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், இந்தியாவில் வெளிப்படையான லேபிளிங் முறையை அமல்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.



