பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரி பிரயாக்ராஜைச் சேர்ந்த மாணவி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் சீருடை விதிகளில் மாற்றம் செய்ய மாணவர்களுக்கு உரிமை இல்லை என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
ஒழுக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சீருடை விதிகளை அமல்படுத்த முழு அதிகாரம் உண்டு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21 அன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் அத்தியாவசிய நடைமுறை அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அதே மதத்தைச் சேர்ந்த பிற மாணவர்கள் யாரும் ஹிஜாப் அணிவதில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சீருடை விதிகளில் தனிப்பட்ட விலக்கு அளிப்பது, கல்வி நிறுவனத்தின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பாதிக்கும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், பல்வேறு பின்னணி கொண்ட மாணவர்களிடையே சமத்துவத்தை உருவாக்க சீருடை அவசியம் என்ற பள்ளி நிர்வாகம், மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) ஆகியவற்றின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.




