ஈரானின் பிக்ஆக்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள அணுசக்தி மையத்தை அமெரிக்கா விரைவில் தாக்கக்கூடும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த மையத்தை அமெரிக்க உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அங்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். நாடன்ஸ் அருகே அமைந்துள்ள இந்த அணுசக்தி மையம், நிலத்தடி சுரங்க அமைப்புகளைக் கொண்டிருப்பதால் சாதாரண குண்டுவீச்சுகளைத் தாங்கும் திறன் கொண்டது எனக் கருதப்படுகிறது.
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது. வணிகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் பணியாளர்கள் மீதான தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்கும், பிராந்திய மோதல்களைத் தவிர்ப்பதற்கும் இந்த ராணுவ நடவடிக்கைகள் அவசியம் என டிரம்ப் நியாயப்படுத்தினார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல் என்றும், பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தளங்களாகச் செயல்பட்ட மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாங்கள் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



