பிரான்சின் ஈபிள் கோபுரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் இந்து மத அமைப்பான பி.ஏ.பி.எஸ் (BAPS) குழுவினர் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்தபோது, பெண் ஊழியர்கள் ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஆண்கள் பணியமர்த்தப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றது. கோயில் திறப்பு விழாவுக்காக பிரான்ஸ் வந்திருந்த அந்த குழுவினரின் விருப்பத்திற்கேற்ப, பெண் ஊழியர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் அல்லது பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது பாலின சமத்துவத்திற்கான நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது என ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் எஸ்.இ.டி.இ (SETE) நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தை ஈபிள் கோபுர நிர்வாகத்தின் தலைவர் ஏரியல் வெயில் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பாரிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பிரான்சின் சமத்துவத்துறை அமைச்சர் அரோரா பெர்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத நம்பிக்கைகள் நாட்டின் பாலின சமத்துவ சட்டங்களுக்கு மேலானவை அல்ல என கண்டனம் தெரிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக திங்கள்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்பட்டது, செவ்வாய்க்கிழமை முதல் பணிகள் வழக்கம் போல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பி.ஏ.பி.எஸ் அமைப்பு தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. தாங்கள் யாருடைய அணுகலையும் வேண்டுமென்றே தடுக்கவில்லை என்றும், ஈபிள் கோபுர நிர்வாகத்துடன் இணைந்துதான் வருகையை ஒருங்கிணைத்தோம் என்றும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.



