ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவின் பல போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதில் ஏ-10 தண்டர்போல்ட் ரக விமானத்தின் சிறகு சேதமடைந்துள்ளதாகவும், சுமார் எட்டு எஃப்-15 போர் விமானங்கள் லேசான சேதங்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளை பயன்படுத்தின. வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜோர்டான் வான்பரப்பில் ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சிய இரண்டு ஏவுகணைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே, இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இந்த பதற்றம் பிராந்தியத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இடைக்கால தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




