ஒரேக்கிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணிநீக்க அறிவிப்புகளை அனுப்பி புதிய கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. காலை 6 மணி அளவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல்களில், நிறுவனத்தின் அமைப்பு ரீதியான மாற்றங்களின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பணி நீக்கப்படுவதாகவும், அந்த நாளே அவர்களின் கடைசி வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நிறுவன கணினி அணுகல் வசதிகள் துண்டிக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு துறைகளில் ஒரேக்கிள் நிறுவனம் தீவிர முதலீடுகளைச் செய்து வருகிறது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் 28.5 பில்லியன் டாலர்களை மூலதனச் செலவாக மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் உலகளவில் தனது பணியாளர் எண்ணிக்கையை 13 சதவீதம் குறைத்திருந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
தொழில்நுட்பத் துறையில் நிலவும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பணிநீக்கங்கள் பார்க்கப்படுகின்றன. நடப்பாண்டில் மட்டும் உலகளவில் தொழில்நுட்பத் துறையில் 1 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். சில பணிகள் தானியங்கி மயமாக்கப்படுவதாலும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்து அணிகளை மறுசீரமைக்க நிறுவனங்கள் முற்படுவதாலும் இந்த பணிநீக்கங்கள் நிகழ்வதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


