மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குடமுழுக்கு நிகழ்வின்போது, பக்தர்கள் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணி வரை, அனுமதி அட்டை இல்லாதவர்கள் சித்திரை வீதிகளில் நிற்க அனுமதி இல்லை. மேலும், கட்டிடங்களின் மேற்கூரைகளில் நின்று கூட்டமாக குடமுழுக்கைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது; விதிமீறலில் ஈடுபடும் கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது தரிசனம் காலை 10 மணிக்கு மேல் தொடங்கும். பக்தர்கள் மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாகக் கோயிலுக்குள் செல்லலாம். தரிசனம் முடித்த பிறகு, கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

