மெட்டா நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைமை அதிகாரி ஆண்ட்ரூ போஸ்வொர்த், ஊழியர்களின் கூடுதல் விடுமுறை கோரிக்கையை நிராகரித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வழங்கப்பட்ட 'மெட்டா டேஸ்' எனப்படும் கூடுதல் விடுமுறை நாட்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஜூலை மாதம் நடைபெற்ற நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில், இந்தக் கோரிக்கையை 'மிகவும் முட்டாள்தனமானது' என்று குறிப்பிட்ட போஸ்வொர்த், செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்கும் உற்பத்தித் திறனை விடுமுறை நாட்களாக மாற்றாமல், பயனர்களுக்கான சிறந்த தயாரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
தனது கடுமையான கருத்துக்காகப் பின்னர் அவர் மன்னிப்பு கோரினாலும், நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே முன்னுரிமை என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். 2022-ஆம் ஆண்டில் பணியாளர் நியமனம் நிறுத்தப்பட்டபோது, விடுமுறை நாட்களைக் குறைத்து, அதற்குப் பதிலாக இரண்டு விருப்ப விடுமுறை நாட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனிடையே, செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக ஊழியர்களைக் கண்காணிக்கும் மென்பொருளை நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் முன்னுரிமைகள் குறித்து ஊழியர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.


