சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் தங்களது முதல் உரையை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் தொகுதி தவெக உறுப்பினர் டாக்டர் அருண்குமார் ஆகஸ்ட் 20 அன்று தனது உரையை கன்னிப் பேச்சு என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கன்னி என்ற சொல் இளம் வயதுப் பெண்ணைக் குறிப்பதாகவும், கற்பு ஒழுக்கத்தோடு தொடர்புடையது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தான் முதன்முதலில் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அறிமுகப் பேச்சு அல்லது முதல் பேச்சு என்று அழைப்பதே நாகரிகமானது என அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.
தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் கன்னிப் பேச்சு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

