பொதுவெளியில் ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களுக்கு இல்லை என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ஆண்கள் வேட்டி அணிவது, நீண்ட தலைமுடி வளர்ப்பது, கொண்டை போடுவது, காலில் மெட்டி அணிவது போன்ற பழக்கங்களைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட ஜோதிமணி, காலத்திற்கேற்ப ஆண்களின் உடை மற்றும் தோற்றம் மாறியபோது அது பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்றார். ஆனால் பெண்களின் நடை, உடை மற்றும் பாவனைகள் மட்டும் தொடர்ந்து சமூகத்தின் விசாரணைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக பொதுவாழ்வில் உள்ள பெண்களின் உடல், உடை மற்றும் தோற்றத்தை மையப்படுத்தி கேலி செய்வது சாதாரண விமர்சனம் அல்ல என்றும், பெண்களை முழுமையான மனிதர்களாகப் பார்க்காமல் அவர்களின் உடலை மட்டுமே மையப்படுத்திப் பார்க்கும் மனநிலையின் வெளிப்பாடு என்றும் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
அமைச்சர் கீர்த்தனாவைச் சுற்றி தற்போது உருவாகியுள்ள சர்ச்சையும் இதன் தொடர்ச்சியே என்று தெரிவித்த அவர், சமூக வலைதளங்களில் பரவும் குறிப்பிட்ட காணொளியில் இருப்பவர் கீர்த்தனா அல்ல என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில், அந்தக் காணொளியில் இருப்பவர் கீர்த்தனாவாகவே இருந்தாலும் கூட, ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கவோ, அதற்காக அவரை அவமானப்படுத்தவோ உரிமை இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாழ்வில் இருக்கும் பெண்களின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் அவர்களின் உடலைத் தாக்குவதும், உருவக் கேலி செய்வதும் விமர்சனம் அல்ல; அது ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடு மற்றும் ஒரு வகையான சமூக வன்முறை என ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் நீண்ட காலமாக பெண்களுக்கு எதிராக நடைபெற்று வந்தாலும், இன்றைய பெண்கள் அவற்றைக் கண்டு ஒதுங்காமல், தங்களுக்கு எதிரான அவதூறுகளையும் இழிவான விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“பெண்களின் உடை பிரச்சினை அல்ல. பெண்களைப் பார்க்கும் பார்வையே பிரச்சினை. மாற்ற வேண்டியது அதைத்தான்” என்று தெரிவித்த ஜோதிமணி, இந்த விவகாரத்தில் கீர்த்தனா வெளிப்படுத்திய தைரியமான எதிர்வினைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


