நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், தாக்குதலில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். 42-வது வீதி மற்றும் ஏழாவது அவென்யூ சந்திப்புக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் காயமடைந்த மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண், காவல் நிலையத்தை நோக்கிச் சென்றார். அவரிடம் இரண்டு பெரிய கத்திகள் இருந்ததை கண்ட காவல்துறையினர், அவரைத் தடுக்க முயன்றனர். அப்போது அவர் காவல்துறையினரை நோக்கி முன்னேறியதால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


