இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செப்டம்பர் 4-ம் தேதி அதிகாலை 2:55 மணிக்கு EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. ஜிஎஸ்எல்வி (GSLV) F17 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பிஎஸ்எல்வி (PSLV)-C62 விண்கல ஏவுதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு இஸ்ரோ தனது விண்வெளிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.
GISAT-1A என்றும் அழைக்கப்படும் EOS-05 செயற்கைக்கோள், இயற்கை பேரிடர் கண்காணிப்பு, விவசாயம் மற்றும் வனத்துறை சார்ந்த பணிகளுக்காக பெரிய அளவிலான பகுதிகளை அடிக்கடி படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் தாழ்வான புவிப்பாதையில் நிலைநிறுத்தப்படும் நிலையில், இந்த செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் (geosynchronous orbit) நிலைநிறுத்தப்பட உள்ளது. 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சில விண்வெளிப் பயணங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், இஸ்ரோவின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. ஜனவரி மாத தோல்விக்கு ராக்கெட்டின் மூன்றாம் நிலையில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், இது குறித்த விரிவான விசாரணை அறிக்கையை இஸ்ரோ இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை.



