தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி, இது ஊழலை ஒழிப்பதற்கான ஒரு முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விதிமுறை அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தாமல் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி தங்களது சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் மட்டுமே நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்று அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்தால், அது குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



