திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி மற்றும் ஆர்ஜித சேவைகளுக்காக போலி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மோசடி செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. தேவஸ்தானத்தின் பெயரிலும் சின்னத்திலும் இயங்கும் இத்தகைய போலி தளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் தரிசனம் மற்றும் இதர சேவைகளை முன்பதிவு செய்ய தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். மேலும், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியைப் பயன்படுத்துமாறும், வாட்ஸ்அப் மூலம் வரும் பொய்யான தகவல்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவஸ்தானத்தின் பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மற்றும் போலி இணையதளங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்தகைய 259 போலி இணையதளங்கள் மீது தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





