கூடங்குளம் அணுமின் நிலையம் தனது செயல்பாட்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 1,30,627 மில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட முதல் இரண்டு அணு உலைகளும், வளிமண்டலத்தில் 11.22 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளன. தற்போது இந்த இரண்டு உலைகளும் 101.5 சதவீதத்திற்கும் அதிகமான திறன் காரணியுடன் இயங்கி வருவதாக, அந்த நிலையத்தின் இயக்குநர் அசோக் பாட்டியா தெரிவித்துள்ளார். இதில், இரண்டாவது அணு உலை தொடர்ந்து 638 நாட்களுக்கு மேல் இயங்கி, முதல் உலை படைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. முதல் உலை 2013 அக்டோபர் 22-ம் தேதியும், இரண்டாவது உலை 2016 அக்டோபர் 15-ம் தேதியும் செயல்பாட்டுக்கு வந்தன.
ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் மேலும் நான்கு அணு உலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐந்தாவது உலையின் அழுத்தக் கலன் (reactor pressure vessel) வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது; மூன்றாவது உலையில் 'ஸ்பிலேஜ் டூ ஓபன் ரியாக்டர்' (Spillage to Open Reactor) என்ற முக்கிய இலக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும், தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.155.33 கோடியை நிர்வாகம் செலவிட்டுள்ளது.




