11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவை அமைத்துள்ளது. கல்வியாளர் சந்தீப் சாஸ்திரி தலைமையிலான இந்தக் குழு, இந்திய அறிவு மரபுகள், கலாச்சார வேர்கள் மற்றும் உள்ளடக்கிய கல்வி ஆகிய கருப்பொருள்களைப் பாடப்புத்தகங்களில் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடும்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 11-ஆம் வகுப்புக்கான பாடப்புத்தகத்தை நவம்பர் மாதத்திற்குள்ளும், 12-ஆம் வகுப்புக்கான பாடப்புத்தகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள்ளும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள யதுநாத் தேஷ்பாண்டே, பிரசாந்த் திவேகர், வந்தனா மிஸ்ரா மற்றும் ரவி ரமேஷ் சந்திர சுக்லா உள்ளிட்ட உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



