பொதுக் கட்டுமானத் திட்டங்களின் தரம் திருப்திகரமாக இல்லை என பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். மாதாந்திர 'பிரகதி' கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில உயர் அதிகாரிகளிடம் பேசிய அவர், தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் தரப்பு தணிக்கை முறைகள் போதிய பலனைத் தரவில்லை என்றும், நான்காம் தரப்பு தணிக்கை அவசியமா என கேள்வி எழுப்பினார். ஒன்பது மாநிலங்களில் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான ஆறு உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்த பிரதமர், திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது அவசியம் என்றாலும், தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.
கட்டுமானப் பணிகளைத் தனித்தனிப் பகுதிகளாகப் பார்க்காமல், ஒருங்கிணைந்த அமைப்புகளாகக் கண்காணித்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டும் போதாது, அதற்கேற்ற மின்கடத்திக் கோடுகள் போன்ற உள்கட்டமைப்புகளும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, அதிகரித்து வரும் சைபர் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், புதிய மோசடி முறைகளை எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகளுக்குத் தொடர் பயிற்சிகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக 20 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் விளக்கமளித்தார்.


