புது தில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், 11 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு 'புது தில்லி பிரகடனம் 2026'-ஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இது இந்தியாவுக்குக் கிடைத்த முக்கிய ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த தலைவர்கள், அந்தப் பகுதியில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய மோதல் சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வுகாண அழைப்பு விடுத்தனர். மேலும், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிப்பதாகப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமின்றி, ஒருதலைப்பட்சமான வர்த்தக வரி விதிப்புகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட பன்முக வர்த்தகக் கட்டமைப்பிற்குத் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தின.




