வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜூலை 27-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தடையால், எல்லையோர மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னச்சாமி தெரிவித்தார். பல கோடி ரூபாய் முதலீடு செய்து வங்கிக் கடன் பெற்று தொழில் செய்து வரும் நிலையில், இந்த திடீர் தடையால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், உரிமையாளர்கள் கடனை அடைக்க முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
மதுரை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சட்டத்திற்கு உட்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல அரசு மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். குவாரி உரிமையாளர்கள் கனிமங்களின் விலையை உயர்த்தி விற்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
அரசு நிர்ணயித்த விலையை விட சந்தை போட்டியால் குறைவான விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் விளக்கினார். அதேவேளையில், தற்போதைய ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட உரிமங்கள் விரைவாக கிடைப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)